87. பகை மாட்சி
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பால்; அறத்துப்பால் 1-38 , பொருட்பால் 39-108 , காமத்துப்பால் 109-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இயல் ; பாயிரவியல் 1-4 , இல்லறவியல் 5-24
துறவறவியல் 25-37, ஊழியல் 38 , அரசியல் 39-63
அமைச்சியல் 64-73 ,அரணியல் 74-75
கூழியல் 76 , படையில் 77-78 , நட்பியல் 79-95
குடியியல் 96-108 , களவியல் 109-115 , கற்பியல் 116-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல்
ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
மு.வ உரை:
தம்மை விட வலியவர்க்கு
மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல்
விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர் நம்மிலும் வலியர்
என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.
கலைஞர் உரை:
மெலியோரை விடுத்து,
வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்
குறள் 862:
அன்பிலன் ஆன்ற துணையிலன்
தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான்
துப்பு
மு.வ உரை:
ஒருவன் அன்பு இல்லாதவனாய்,
அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை
எவ்வாறு ஒழிக்க முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
மக்களிடத்தில் அன்பு
இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால்,
அப்பகையின் வலிமையை எப்படி அழிக்க முடியும்?
கலைஞர் உரை:
உடனிருப்போரிடம் அன்பு
இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல
முடியும்?
குறள் 863:
அஞ்சும் அறியான் அமைவிலன்
ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு
மு.வ உரை:
ஒருவன் அஞ்சுகின்றவனாய்,
அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால்
, அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
சாலமன் பாப்பையா உரை:
பயப்பட வேண்டாததற்குப்
பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும்
தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.
கலைஞர் உரை:
அச்சமும், மடமையும்
உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால்,
அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்
குறள் 864:
நீங்கான் வெகுளி நிறையிலன்
எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும்
எளிது
மு.வ உரை:
ஒருவன் சினம் நீங்காதவனாய்,
நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும்
எவர்க்கும் எளியவன்.
சாலமன் பாப்பையா உரை:
கோபம் குறையாத, ரகசியங்களைக்
காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.
கலைஞர் உரை:
சினத்தையும் மனத்தையும்
கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு
வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்
குறள் 865:
வழிநோக்கான் வாய்ப்பன
செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்
கினிது
மு.வ உரை:
ஒருவன் நல்வழியை நோக்காமல்
பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால்
அவன் பகைவர்க்கும் எளியனவான்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி நூல்கள் சொல்லும்
வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும்
வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.
கலைஞர் உரை:
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச்
செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில்
வெல்லப்படுவான்
குறள் 866:
காணாச் சினத்தான் கழிபெருங்
காமத்தான்
பேணாமை பேணப் படும்
மு.வ உரை:
ஒருவன் உண்மை காணாத
சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
நன்மை தீமை, வேண்டியவர்
வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய
அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.
கலைஞர் உரை:
சிந்திக்காமலே சினம்
கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்
குறள் 867:
கொடுத்துங் கொளல்வேண்டும்
மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை
மு.வ உரை:
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும்
பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைத் தொடங்கி
விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை
அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.
கலைஞர் உரை:
தன்னோடு இருந்துகொண்டே
தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக்
கொள்ள வேண்டும்
குறள் 868:
குணனிலனாய்க் குற்றம்
பலவாயின் மாற்றார்க்
கினனிலனாம் ஏமாப் புடைத்து
மு.வ உரை:
ஒருவன் குணம் இல்லாதவனாய்,
குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு
நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணங்கள் இல்லாமல்
குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த
அரசின் பகைவர்க்கு பலம்.
கலைஞர் உரை:
குணக்கேடராகவும், குற்றங்கள்
மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்
குறள் 869:
செறுவார்க்குச் சேணிகவா
இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்
மு.வ உரை:
அறிவு இல்லாத அஞ்சும்
இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில்
நீங்காமல் இருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதியை அறியும் அறிவற்ற,
எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த
நன்மைகள் விலக மாட்டா.
கலைஞர் உரை:
அஞ்சிடும் கோழைகளாகவும்,
அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும்
இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்
குறள் 870:
கல்லான் வெகுளும் சிறுபொருள்
எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி
மு.வ உரை:
கல்வி கற்காதவனைப்
பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து
பொருந்தாது.
சாலமன் பாப்பையா உரை:
நீதி நூல்களைக் கல்லாதவனைப்
பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ்
சேராது.
கலைஞர் உரை:
போர்முறை கற்றிடாத
பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி
எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்
No comments:
Post a Comment