94. சூது
;;;;;;;;;;;;;;;;;;
பால்; அறத்துப்பால் 1-38 , பொருட்பால் 39-108 , காமத்துப்பால் 109-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இயல் ; பாயிரவியல் 1-4 , இல்லறவியல் 5-24
துறவறவியல் 25-37, ஊழியல் 38 , அரசியல் 39-63
அமைச்சியல் 64-73 ,அரணியல் 74-75
கூழியல் 76 , படையில் 77-78 , நட்பியல் 79-95
குடியியல் 96-108 , களவியல் 109-115 , கற்பியல் 116-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
குறள் 931:
வேண்டற்க வென்றிடினும்
சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி
அற்று
மு.வ உரை:
வெற்றியே பெறுவதாலும்
சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி
மீன் விழுகினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
வெற்றி பெறும் ஆற்றல்
இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும்
உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.
கலைஞர் உரை:
வெற்றியே பெறுவதாயினும்
சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை
மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்
குறள் 932:
ஒன்றெய்தி நூறிழக்கும்
சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர்
ஆறு
மு.வ உரை:
ஒரு பொருள் பெற்று
நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்றைப் பெற்று, நூற்றினை
இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?
கலைஞர் உரை:
ஒரு வெற்றியைப் பெற்ற
மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில்
நலம் ஏற்பட வழி ஏது?
குறள் 933:
உருளாயம் ஓவாது கூறிற்
பொருளாயம்
போஒய்ப் புறமே படும்
மு.வ உரை:
ஒருவன் உருளுகின்ற
கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு
நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டத்தில் பெற்ற
லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர்
வசம் அகப்பட்டுவிடும்.
கலைஞர் உரை:
பணையம் வைத்து இடைவிடாமல்
சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும்
வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்
குறள் 934:
சிறுமை பலசெய்து சீரழிக்கும்
சூதின்
வறுமை தருவதொன் றில்
மு.வ உரை:
ஒருவனுக்குத் துன்பம்
பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும்
இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
துன்பங்கள் பல தந்த,நம்
புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.
கலைஞர் உரை:
பல துன்பங்களுக்கு
ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான
செயல் வேறொன்றும் இல்லை
குறள் 935:
கவறும் கழகமும் கையும்
தருக்கி
இவறியார் இல்லாகி யார்
மு.வ உரை:
சூதாடு கருவியும்,
ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்)
இல்லாதவர் ஆகிவிடுவார்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டத்தையும் சூதாடும்
இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக்
கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.
கலைஞர் உரை:
சூதாடும் இடம், அதற்கான
கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே
ஆகிவிடுவார்கள்
குறள் 936:
அகடாரார் அல்லல் உழப்பர்சூ
தென்னும்
முகடியான் மூடப்பட்
டார்
மு.வ உரை:
சூது என்று சொல்லப்படும்
மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டம் என்னும்
மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.
கலைஞர் உரை:
சூது எனப்படும் தீமையின்
வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்
குறள் 937:
பழகிய செல்வமும் பண்பும்
கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
மு.வ உரை:
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய
காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும்
கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாடு களத்துக்குள்
காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.
கலைஞர் உரை:
சூதாடும் இடத்திலேயே
ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும்
நற்பண்பையும் நாசமாக்கிவிடும்
குறள் 938:
பொருள்கெடுத்துப் பொய்மேற்
கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும்
சூது
மு.வ உரை:
சூது உள்ள பொருளை அழித்துப்
பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச்
செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டம் பொருளை அழிக்கும்.
பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.
கலைஞர் உரை:
பொருளைப் பறித்துப்
பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது
சூது
குறள் 939:
உடைசெல்வம் ஊணொளி கல்வியென்
றைந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்
மு.வ உரை:
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால்,
புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டத்தை விரும்பினால்
மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.
கலைஞர் உரை:
சூதாட்டத்திற்கு அடிமையாகி
விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி
விடும்
குறள் 940:
இழத்தொறூஉம் காதலிக்கும்
சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்
றுயிர்
மு.வ உரை:
பொருள் வைத்து இழக்க
இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந
வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பத்தை அனுபவிக்கும்
போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து
துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.
கலைஞர் உரை:
பொருளை இழக்க இழக்கச்
சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது
கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்
No comments:
Post a Comment