95. மருந்து
;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பால்; அறத்துப்பால் 1-38 , பொருட்பால் 39-108 , காமத்துப்பால் 109-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இயல் ; பாயிரவியல் 1-4 , இல்லறவியல் 5-24
துறவறவியல் 25-37, ஊழியல் 38 , அரசியல் 39-63
அமைச்சியல் 64-73 ,அரணியல் 74-75
கூழியல் 76 , படையில் 77-78 , நட்பியல் 79-95
குடியியல் 96-108 , களவியல் 109-115 , கற்பியல் 116-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
குறள் 941:
மிகினும் குறையினும்
நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
மு.வ உரை:
மருத்துவ நூலோர் வாதம்
பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மருத்துவ நூலோர் சொல்லும்
வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு
ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.
கலைஞர் உரை:
வாதம், பித்தம், சிலேத்துமம்
என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும்
நோய் உண்டாகும்
குறள் 942:
மருந்தென வேண்டாவாம்
யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்த
தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முதலில் உண்டது
சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று
வேண்டியது இல்லை.
கலைஞர் உரை:
உண்ட உணவு செரிப்பதற்கான
கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
குறள் 943:
அற்றால் அளவறிந் துண்க
அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும்
ஆறு
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்துவிட்டால்,
பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும்
வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டது
தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த
உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
கலைஞர் உரை:
உண்ட உணவு செரித்ததையும்,
உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்
குறள் 944:
அற்ற தறிந்து கடைப்பிடித்து
மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்த
தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை
அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை
உண்க.
கலைஞர் உரை:
உண்டது செரித்ததா என்பதை
உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்
குறள் 945:
மாறுபா டில்லாத உண்டி
மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு
மு.வ உரை:
மாறுபாடில்லாதா உணவை
அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் உடம்பிற்கு
ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
கலைஞர் உரை:
உடலுக்கு ஒத்துவரக்கூடிய
உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை
குறள் 946:
இழிவறிந் துண்பான்கண்
இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண்
நோய்
மு.வ உரை:
குறைந்த அளவு இன்னதென்று
அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய்
நிற்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:
குறைவாக உண்பதே நல்லது
என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம்
நோய் விலகாமல் இருக்கும்.
கலைஞர் உரை:
அளவோடு உண்பவர் உடல்
நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை
குறள் 947:
தீயள வன்றித் தெரியான்
பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்
மு.வ உரை:
பசித்தீயின் அளவின்
படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு
விடும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் வயிற்றுப் பசி
அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.
கலைஞர் உரை:
பசியின் அளவு அறியாமலும்,
ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்
குறள் 948:
நோய்நாடி நோய்முதல்
நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்
செயல்
மு.வ உரை:
நோய் இன்னதென்று ஆராய்ந்து,
நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும்
படியாகச் செய்யவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நோயாளியின் உடல்மாற்றங்களால்
வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும்
வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
கலைஞர் உரை:
நோய் என்ன? நோய்க்கான
காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்
(உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)
குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும்
காலமும்
கற்றான் கருதிச் செயல்
மு.வ உரை:
மருத்துவ நூலைக் கற்றவன்,
நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மருத்துவ நூலை நன்கு
கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும்
காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.
கலைஞர் உரை:
நோயாளியின் வயது, நோயின்
தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப்
பார்த்தே செயல்பட வேண்டும்
குறள் 950:
உற்றவன் தீர்ப்பான்
மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து
மு.வ உரை:
நோயுற்றவன், நோய் தீர்க்கும்
மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப்
பாகுபாடு உடையது.
சாலமன் பாப்பையா உரை:
நோயாளி, மருத்துவர்,
மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
கலைஞர் உரை:
நோயாளி, மருத்துவர்,
மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது
No comments:
Post a Comment