97. மானம்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பால்; அறத்துப்பால் 1-38 , பொருட்பால் 39-108 , காமத்துப்பால் 109-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இயல் ; பாயிரவியல் 1-4 , இல்லறவியல் 5-24
துறவறவியல் 25-37, ஊழியல் 38 , அரசியல் 39-63
அமைச்சியல் 64-73 ,அரணியல் 74-75
கூழியல் 76 , படையில் 77-78 , நட்பியல் 79-95
குடியியல் 96-108 , களவியல் 109-115 , கற்பியல் 116-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
குறள் 961:
இன்றி அமையாச் சிறப்பின
ஆயினும்
குன்ற வருப விடல்
மு.வ உரை:
இன்றியமையாத சிறப்பை
உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்று இல்லாமல் எதுவும்
நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு
இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.
கலைஞர் உரை:
கட்டாயமாகச் செய்து
தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத்
தவிர்த்திடல் வேண்டும்
குறள் 962:
சீரினும் சீரல்ல செய்யாரே
சீரொடு
பேராண்மை வேண்டு பவர்
மு.வ உரை:
புகழோடு பெரிய ஆண்மையும்
விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
புகழுடன் தன் குடும்பப்
பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப்
பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.
கலைஞர் உரை:
புகழ்மிக்க வீர வாழ்க்கையை
விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான
காரியத்தில் ஈடுபடமாட்டார்
குறள் 963:
பெருக்கத்து வேண்டும்
பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும்
உயர்வு
மு.வ உரை:
செல்வம் பெருகியுள்ள
காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில்
பணியாத உயர்வு வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில்
பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை
வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் உரை:
உயர்ந்த நிலை வரும்போது
அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான
உணர்வும் வேண்டும்
குறள் 964:
தலையின் இழிந்த மயிரனையர்
மாந்தர்
நிலையின் இழிந்தக்
கடை
மு.வ உரை:
மக்கள் தம் உயர்வுக்கு
உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர்
ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில்
பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு
விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.
கலைஞர் உரை:
மக்களின் நெஞ்சத்தில்
உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த
மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்
குறள் 965:
குன்றின் அனையாரும்
குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
மு.வ உரை:
மலை போல் உயர்ந்த நிலையில்
உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து
போய் விடுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில்
பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து
போவார்.
கலைஞர் உரை:
குன்றினைப் போல் உயர்ந்து
கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப்
போய் விடுவார்கள்
குறள் 966:
புகழின்றால் புத்தேணாட்
டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று
நிலை
மு.வ உரை:
மதியாமல் இகழ்கின்றவரின்
பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது,
வேறு பயன் என்ன.
சாலமன் பாப்பையா உரை:
உயிர் வாழும் பொருட்டு
மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ்
தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?
கலைஞர் உரை:
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு,
மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத
சொர்க்கமா கிடைக்கும்?
குறள் 967:
ஒட்டார்பின் சென்றொருவன்
வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல்
நன்று
மு.வ உரை:
மதியாதவரின் பின் சென்று
ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல்
நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
இகழுபவர் பின்னே சென்று
அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று
சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.
கலைஞர் உரை:
தன்னை மதிக்காதவரின்
பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்
குறள் 968:
மருந்தோமற் றூனோம்பும்
வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து
மு.வ உரை:
ஒருவனுடைய பெருந்தகைமை
தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு
மருந்தோ.
சாலமன் பாப்பையா உரை:
குடும்பப் பெருமைக்கான
மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு
மருந்து ஆகுமோ?
கலைஞர் உரை:
சாகாமலே இருக்க மருந்து
கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக
ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்
குறள் 969:
மயிர்நீப்பின் வாழாக்
கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம்
வரின்
மு.வ உரை:
தன் உடம்பிலிருந்து
மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
சாலமன் பாப்பையா உரை:
மயிர்எலாம் இழந்துவிட்டால்
உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால்
உயிர் வாழமாட்டார்.
கலைஞர் உரை:
உடலில் உள்ள உரோமம்
நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த
மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்
குறள் 970:
இளிவரின் வாழாத மானம்
உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு
மு.வ உரை:
தமக்கு யாதேனும் இழிவு
நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இகழ்ச்சி வரும்போது
உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.
கலைஞர் உரை:
மானம் அழியத்தக்க இழிவு
வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி
நிற்கும்
No comments:
Post a Comment